அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு இம்முறை புதுவருடப் பரிசாக பெறுமதியான பரிசொன்றை வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். பாரியளவில் மின் கட்டணங்களை அதிகரிப்பே அந்த பெறுமதியான பரிசெனவும், இவ்வாறு பாரியளவில் மின் கட்டணங்களை அதிகரித்திருப்பதானது ஏனைய துறைகளில் இடம்பெறும் மோசடிகளினால்ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு நடவடிக்கையில் மக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பொய்யான செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த ஆணைக்குழுவில் அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்களே உள்ளனர் அவர் மேலும் கூறினார். அந்த ஆணைக்குழுவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமானது மக்கள் ஆலோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது தெளிவாகின்றது எனவும், அவர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான ஆணைக்குழுவின் மூலம் மக்கள் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது எனவும், அநீதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பிற்கெதிராக மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கப் போவதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.








0 Comments:
Post a Comment