பழைய இரும்புகளை உருக்கி மீண்டும் இரும்புப் பொருட்களை உற்பத்தி செய்யும்
இந்திய நாட்டவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றும் இந்திய
தொழிலாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் உடன்பாடுகள் எதுவுமின்றி தொடர்ந்து
இடம்பெற்று வருகின்றது. மாதம்பை சுதுவெல்ல எனும் பிரதேசத்திலேயே இந்த
தொழிற்சாலை அமைந்துள்ளது.
தமக்கு போதிய சம்பளம் மற்றும் வசதிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இத்தொழிலாளர்கள் கடந்த 8ம் திகதி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 225 இந்திய தொழிலாளர்களுள் 90 பேர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மை குறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்து வரும் போது மாதம் இருபதாயிரம் ரூபாய் ஊதியம் உட்பட தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளும் தரப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும் தமக்கு எதுவித வசதிகளும் செய்து தரப்படாததுடன் ஊதியமாக மாதம் 7 ஆயிரம் ரூபாயே வழங்கப்படுவதாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர். எனவே தம்மை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு இவர்களுள் ஆறுபேர் நிருவாகத்திடம் கேட்டுள்ளனர். எனினும் அந்த வேண்டுகோள் கவனிக்கப்படாததையடுத்தே இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் கம்பி உற்பத்தி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக தொழிற்சாலையின் ஏனைய பிரிவுகளின் பணிகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









0 Comments:
Post a Comment